மியாவ் - மியாவ்  

Posted by Matangi Mawley


இப்போதான் செத்த அக்காடான்னு அப்டியே உக்காந்தேன். ஒரே ஏறச்ச காடா இருக்கு! அந்த டி.வி. பொழுதன்னிக்கும் கத்திண்டே இருக்கணுமா? Off பண்ணுன்னா கேக்கரதா பாரு! யாராது வாசல்ல வந்து கூப்டா கூட தெரியாது. அக்கம் பக்கத்ல இருக்கறவாள்லாம் சண்டைக்கு வருவா. ஆனா வெளீலையே ஏதோ சத்தம் கேக்கறாப்ல இருந்தது. என்னடான்னு எட்டி பாக்கலாம்னா முடியல! இத போய் பாருடான்னேன். இது அப்டியா-இப்டியான்னு மொனகிண்டே மெதுவா நகந்து வாசலுக்கு போய் பாத்துது!

"
அம்மா! அம்மா! ஓடி வா... சீக்கரம்... " னு கத்தித்து!

நானும் கஷ்டப்பட்டு எழுந்து போய் பாத்தா, மூணு பூனை குட்டி! பசி பாவம். எங்காத்து படிக்கட்டு பக்கத்ல நின்னுண்டு "மியாவ்- மியாவ்" னு chorus- கத்திண்டுருந்துதுகள்!

பாரதியாராத்து பூனகளாட்டமா- ஒன்னு சாம்பல் நிறம், ஒன்னு கரும் பாம்பின் நிறம், இன்னொண்ணு பாலின் நிறம். மூணும் மூஞ்சிய பாவமா வெச்சுண்டு எங்காத்தயே நோட்டம் உட்டுண்டுருந்துதுகள்!

எம்பொண்ண பத்திதான் கேக்கணுமா! செரியான ஆள கண்ட சமுத்ரம்! ஒரே "தை தை" தான். தூக்கி வெச்சுண்டு கொஞ்சணுமாம். அது அழுக்கு பண்ணித்துன்னா மட்டும் clean பண்ண அம்மா வரணும். இது தான் ஒரு துறும்ப கிள்ளி அண்ணண்ட போடாதே!

பாவம். பொறந்து ஒரு வாரம் தான் இருக்கும் போலருக்கு. நல்ல பசி அதுகளுக்கு. பால தூக்கி fridge- வெச்சுட்டேன். ஜில்லுன்னு இருக்கு. அதுகளுக்கு ஒத்துக்குமோ, ஒத்துக்காதோ! லேசா சூடு பண்ணி ஜில்லுப்ப மாத்தலாம்னு அடுப்புல வெச்சேன்.

"
அம்மா... உள்ள வருது.. உள்ள வருது.." னு கத்தித்து!

பாத்தா- அதுல இந்த சாம்பல் குட்டி- grill- தாண்டி ஜம்முன்னு உள்ள வருது. அத பாத்துட்டு இது ஒரே ஓட்டம். "தூக்கி வெச்சுண்டு கொஞ்சணுமாம்" இந்த அழகுல! இது பயந்தத பாத்து அந்த குட்டி பயந்து போய்- ஓடி போய்டுத்து வெளீல! மித்த ரெண்டு குட்டிகளும் நடுங்கிண்டு வெளீலயே நின்னுண்டு கத்திண்டுருந்துதுகள்!

பால் ஜில்லுப்பு போய்டுத்து. குட்டிகள் எங்கடான்னு பாத்தா- காணல!

மழை!

பாவம்- எங்கயோ ஓடி போய் ஒளிஞ்சுடுத்துகள். பக்கத்தாத்து மாமி- அங்கேர்ந்து வந்து- அக்கறையா சொன்னா- "எதுத்தாத்து மாமி இப்டிதான் ஒரு நா பூனைக்கு பால் வெச்சா! அதுகள் அவாத்லயே permanent- டேரா போட்டுடுத்துகள்" னு! அதுக்காக வாசல் வந்து கேக்கற குட்டிகள வெரட்டவா முடியும்?

மழை நின்னப்ரம், குட்டிகள் மெதுவா வெளீல வந்துதுகள். பால் விடறதுக்கு இவர் போனார். இவர் வரத பாத்துட்டு- எல்லாம் தூரக்க ஓடி போய் நின்னுண்டு பாத்துண்டே இருந்துதுகள். அவர் விட்டுட்டு போனப்றம் போய் குடிச்சுதுகள்.


அதுக்குள்ள எம்பொண்ணு அதுகள photo எடுக்கறேன் பேர்வழின்னு- ஒரு camera தூக்கிண்டு வந்து "சலங்கை ஒலி" வர photo எடுக்கற குண்டு பையனாட்டம் வித- விதமா எப்டி எப்டியோ photo எடுத்துது!

அன்னிலேர்ந்து தெனம் டான்னு- 6:45 க்கு சாயந்தரம் வந்துடும், மூணும். வந்து வாசல்ல நின்னுண்டு குரல் குடுக்கும். அதுகளுக்கு இது பேரு வெச்சுருக்கு.

அதுல ஒண்ணு உள்ள வந்துதே- சாம்பல்குட்டி- அது பேரு "Vasco" வாம் (Vasco da Gama மாதிரி அது explore பண்ணறதாம்). இன்னொண்ணு கருப்பு- அது "Bosco" (சினிமா வில்லன்லாம் Boss- தானே- கருப்பு பூனை வில்லன் பூனையாம்). மூணாவது "Mosco". அது என்னதுன்னு நேக்கு தெரியாதுடாப்பா!

ஏதோ! அதுகள் புண்ணியத்ல பொழுது போறது! ஒரு அர மணி நேரத்துக்குஆத்துல டி.வி. சத்தம் இருக்காது!

ரப்பர் பந்து  

Posted by Matangi Mawley


இந்த பூமியின் மீது என்னதான் கோபமோ!? அந்த பந்தின் தாக்கத்தைக் கொஞ்சம் உற்றுப் பார்த்திருந்தால் தெரியும். பூமியை துளைத்துக்கொண்டு பிரபஞ்சத்தின் எல்லைகளை எட்டும் போன்ற ஆற்றல்- சீற்றம் அதற்கு! ஆனால் பூமி அதற்கு சம்மதிக்கவில்லை. "உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்" என்று ஏளனமாக எள்ளி நகையாடியது- அந்த பந்தைப் பார்த்து!

பூமியின் அழுத்தத்தில் காயமடைந்த பந்து- ஓய்ந்து போய்விடவில்லை! உண்மைகளைப் புரிந்து கொள்ள ஒரு சில நிரந்தரங்களை உடைத்துத்தான் ஆக வேண்டும். கோடுகளின் கோணங்களே புதிய பாதைகளுக்கு வழி வகுத்திருக்கின்றன! ஆனால் நிரந்தரங்கள் வலுவானவை! பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நிலைத்திருக்கும் அவைகள் "உண்மைகள்" என்ற நம்பிக்கையை தக்க வைத்துக்கொண்டு- அழிக்க முடியா- பெரும் சக்திகளாக பரவி நின்று கொண்டிருந்தன!

அரக்கனின் தலையை வெட்ட-வெட்ட, புதிய தலை முளைப்பது போல! இதன் கருத்தை அறிந்து கொள்ள முயற்சித்தால்- அவன் உயிர் அவனுள் இல்லாது- ஏழு கடல் தாண்டிய ஓர் தீவில், பல்வேறு கணக்கான வாயில்களைத் தாண்டி- அதன் மத்தியில் இருக்கும் இயந்திரக் கிளியில் இருப்பது போன்றது, நிரந்தரத்தின் உண்மை! இந்த நிரந்தரங்களுக்கு ஓய்வும் கிடையாது- அழிவும் கிடையாது! அவைகளின் சக்தி, அவைகளின் 'இருப்பதில்' இல்லை. அவைகளின் 'இருப்பதில்' நம்பிக்கையில் இருக்கிறது!

மனிதர்களை ஏமாற்றுவதற்கு ஓர் பாம்பாட்டியின் திறக்கப்படாத கூடை போதும்! "இதன் மூச்சுக்காற்று பட்டாலே இறந்து போய் விடுவாய்"- என்று அவன் கூவுவதை நம்பி, பணத்தை வீசும் ஏமாளிகள்! நிரந்தரங்களுக்கு, இப்படிப்பட்டவர்கள் எம்மாத்திரம்?

ஒரு சில அபூர்வமான ஜீவன்களும் ஜனித்துள்ளனர். உண்மைகளை அறிய முயற்சித்துள்ளனர்! அவர்களின் முயற்சிகள் பாராட்டிற்குரியவையே! ஆனால் நிரந்தரங்களின் கோணங்கள் மிகவும் விநோதமானவை! "உண்மையை நெருங்கினோம்" என்ற எண்ணத்தில் திளைத்துக் கொண்டிருக்கையில்- நிரந்தரங்கள் அவைகளின் மற்றொரு பொய்யை, மெய் படுத்திக் காட்டிவிடுகின்றன! ஏதோ பசியால் துடிக்கும் நாய்க்கு உணவு கொடுத்து மகிழ்விப்பது போல! அந்த ஜீவன்களும் அதன் பொய்யை 'பொய்' என அறிவதற்குள் மகாத்மாக்களாக மாற்றப்பட்டு விடுகிறார்கள்! அப்படி மாற்றப் பட்டவர்கள், அவ்வாறு மாற்றப்பட்டபின், எப்பொழுதுமே- அவர்களின் 'உண்மை தேடும்' தொழிலை மறந்தே போனார்கள்!

பந்து ஓயவில்லை! அதன் இலட்சியங்களை மறக்கவும் இல்லை! பூமியின் சீற்றத்தின் ஒரு- துளியைக் கண்டு, மிரண்டும் போய்விடவில்லை! விண்ணை நோக்கி உயர்ந்தது! புதிய சக்திகளைத் தேடி! பூமியை எதிர்கொள்ள ஆற்றலைத் தேடி! அச்சக்திகளைப் பெற்று மீண்டும் புவியைத் தாக்கியது! மீண்டும் புவியின் தாக்கத்தை அனுபவித்து- அந்த வலியில் உயிர் பெற்று விண்ணை நோக்கி விரைந்தது!

இப்படியாக, அந்த பந்து- தன்னுள் சக்தி இருக்கும் வரையில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, மீண்டும் - மீண்டும் முயற்சித்தது! பந்து, நிரந்தரமானதா என்ன? பாவம்! களைப்புற்றுப் போய்விட்டது! அதன் களைப்பு- அது தாக்கிய அந்த புவியின் மீதே அதை உருளச் செய்தது!

மெதுவாக நகர்ந்து, அங்கே வெயிலில் காய்ந்து கொண்டிருந்த துணிகளின் கீழ் தாழ்ந்து போனது! அந்த துணிகளிலிருந்து விழும் ஈரத்துளிகள், பந்தின் மீது சொட்ட, பந்து, மீண்டும் உயிர்பெற்றது!

மாற்றம்  

Posted by Matangi Mawley


மாற்றம் ஒன்றே இந்த உலகத்தில் மாறாத ஒன்று என்று பல பேர் சொல்லிக் கேட்டதுண்டு! அதில் எந்த அளவு உண்மை உள்ளது என்று சற்று ஆராய்ந்து பார்கத்தொன்றியது. என்னைத் தலைகீழாக மாற்றிக்கொள்ள முயன்றேன்!

நான் மாறவில்லை...

நான் மாறப்போவதில்லை...