சாரல்  

Posted by Matangi Mawley

நாற்காலியை தரையோடு தேய்த்து நகர்த்திய போது- "க்ரீச்" என்ற சத்தம். அது இல்லாமல் கூட- அந்த சத்தம்- அது இல்லாமல் கூட நகர்த்தி இருக்கலாம். நகர்த்தி இருக்க வேண்டும். நாம் இந்த சத்தத்தை நினைவில் வைத்துக்கொள்ளப் போவதில்லை. அரை வினாடி- அந்த சத்தத்தின்  வாழ்க்கை. ஆனால் எத்தனை  ஜென்மங்கள் அதற்க்கு! 

ஜன்னலின் சிறு விரிசல்களின் ஊடே நுழைந்து  முகத்தின் மீது தெளிக்கும் சாரல். ஜன்னல்களை திறந்து வைத்திருக்கத் தோன்றும் சில தருணங்கள். மழையை- மிகுதியாக நினைக்கின்ற சில நேரங்களில், சாரல் ஒரு குட்டி மழையாக மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. மிகுதியின் மீது சில சமயம் - அதை "வெறுப்பு" என்று சொல்லலாமா? "வெறுப்பை" விட சிறிதளவு குறைவான - உணர்வு. "வெறுப்பும்" "மிகை"யை குறிக்கிறது. 

எண்ணங்களும் கூட- சாரல் போதும் என்ற இடத்தில் பொழியும் மழை போலத்தான். பல வண்ணங்களின் சிறு துளிகள்- கண்களின் முன்   விரைந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு துளியைக் கூட நிதானமாக   ரசிக்க முடிவதில்லை. "ஜிகு-ஜிகு" வென மின்னிக்கொண்டிருக்கும் காகிதத் தோரணங்கள். காற்றில் அசைந்து கொண்டிருக்கையில் பல வண்ண ஒளிக் கீற்றுகள் அதனிலிருந்து. ஒரு மாடு- அதன் கழுத்தில் கட்டியிருக்கும் சலங்கையின் சத்தம். ஒரு குருவி அதன் உறவுகளை அழைத்துக்கொண்டிருந்தது. 

கண்களை மூடவும் முடியவில்லை. எண்ணங்களுக்கு கண்கள் தேவையில்லையே! வானமும், மேகமும்- போர் வதைத்த நாடுகளின் நிழல் பட காட்சிகளும், கோவில் வாசலில் துலைந்து போன புதுச் செருப்பும், எழுத நினைத்து மறந்து போன எழுத்துக்களும், பாத்திரங்களில் பெயர் பதிப்பதை பார்த்த அனுபவமும் என- மூடிய கண்களினுள் எத்தனை காட்சிகள்!

மிகுதியை குறைத்துக் கொள்ளலாமே. எண்ணங்களின் மிகுதியை கட்டுப் படுத்த பல வழிகள் இருக்கின்றனவாம். "த்யானம்". ஏதேனும் ஒரு செயலில் "ஈடுபடுத்தி"க் கொள்ளலாம். நண்பர்கள் வட்டத்தை கூட்டிக்கொள்வதற்கு இது ஒரு வாய்ப்புத் தானே!? இப்படி சில வழிகளும் மிகுதியாகவே இருக்கின்றன. அவைகளும் எண்ணங்களில் பங்கு கேட்டு போட்டி போட்டுக் கொள்கின்றன. சரி. எல்லா எண்ணங்களுக்கும் "சம உரிமை" உண்டு இந்த நினைவோட்டத்தில்- என்று ஒரு எண்ணத்துளியை அணைக்கட்டாக கொடுத்து தடுப்புப் போட்டு விட்டு எண்ணங்களின் மிகுதியை எண்ணிப்பார்தே குறைத்து விடலாம் என்று  எண்ணலானேன்.

குருவியின் அழைப்பும்- மாட்டின்  சலங்கை ஒலியும் ஒன்றாகிப் போனது. ஒரு பெரிய அரச மரம் குறைந்து கொண்டே வந்து- ஒரு செடியாக மாறியது. வண்ணச் சிதறல்கள்- தன் சுய உருவெடுத்து முதலில் வண்ணங்களாகவும்- பிண்பு அந்த வண்ணன்களுக்குச் சொந்தமான உருவங்களாகவும் மாறத் துவங்கின. வேகமாக சுற்றிக்கொண்டிருந்த ராட்டினம், மெதுவாக சுற்றி- நின்ற பிறகும் லேசாக ஆடுவது போல எண்ணங்களின் மிகுதி குறைந்து கொண்டிருந்தது. 

எண்ணிக்கொண்டிருந்தேன். நினைவுகளில் வண்ணங்களை  தேடிக்கொண்டிருந்தேன். கறுப்பும் வெள்ளையுமாக- கண்களின் பார்வை எதை நோக்கிப் போகிறதோ- அந்த காட்சியே எண்ணமாக- வேறேதும் இல்லை. மிகுதியில்லை. சாரலுமில்லை. ஜன்னல் கதவுகள் மூடியே  இருந்தன. அதன் விரிசல்களை கைகளால் அடைத்தால்- "சில்" என்ற சீரான-மென்மையான "காற்றை" விட- அது "தென்றலு"ம் இல்லை- "தென்றல்-துளி" யையும் தாண்டி- துளியான "தென்றல்". 

"மிகுதி"- எங்கே போனது? சாரலில், "மிகுதி"- அதன் இருப்பிடம் கண்டது...