இந்த்ரப்ரஸ்தம்  

Posted by Matangi Mawley


எனக்கு ஒரு நான்கு வயது இருக்கும். நல்ல ஜுரம். அப்பா, office இற்கு leave சொல்லிவிட்டு, என்னை
கவனித்துக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் நான் சாப்பிடும்போது அப்பா கதை சொல்லுவது வழக்கம். இப்பவும் கூட. சமயம் கிடைக்கும் போது. எனக்கு தெரியாத கதை அப்பா-வுக்கு நினைவு வரும் போது. சரி. அன்று- அப்பா-வின் கண்ணில் கண்ணீர். அந்த கண்ணீருடன் பரிச்சயம்- அதுவே முதல் தரம், எனக்கு. ஒரு மாவீரன். சிறுவன். அவனை சூழ்ந்து கொண்ட பல பகைவர்கள்- அவனைக் காட்டிலும் நிறைய வாழ்ந்தவர்கள். அவனது உறவுகள். இறக்கும் தருவாயிலும் அவனது வீரத்தின் உச்சத்தை- தேர் சக்கரத்தை உடைத்து எடுத்து அவன் போர் புரிந்து காட்டினான்- என்ற விஷயம் தான், அந்த கண்ணீர். அந்த கதை- எனக்கு அப்போது புரியவில்லை. என்னை அபிமன்யு-வின் வீரத்தைக் காட்டிலும், அப்பாவின் கண்ணீர் தான் மிகவும் பாதித்தது. அது தான் முதல் முறையாக நான் மகாபாரதக் கதை கேட்டது.

நமது கலாசாரத்திற்க்கே உண்டான ஒரு சில விஷயங்களில்- நாம் இன்னார்- என்று நமக்கு எடுத்துக் காட்டுவதற்கு அத்யாவசியமானது- ராமாயணமும், மகாபாரதமும். இந்த உண்மையை புரிந்து கொள்ளும் பக்குவம் என் சஹ வயதினருக்கே இருப்பதாகத் தோன்றவில்லை. அது போகட்டும். எனக்கும் என் அப்பாவிற்க்குமே ஒரு சில வாதங்கள் உண்டு. ராவணன் மீதும், துரியோதனன் மீதும் எனக்கு ஒரு பரிவு உண்டு- என்பதைக் குறித்து. ராமன்- சீதையை "அக்னி பிரவேசம்" செய்யத் தூண்டியது குறித்து. அவளை நாடு கடத்தியது குறித்து. "அந்த கால வழக்கங்கள்- இன்றைய கால கட்டத்தோடு அதை ஒப்பிட்டு பார்ப்பது தகாது"- என்று அப்பா என்னை சமாதானப் படுத்தினாலுமே- இந்தக் கதைகளில் கூறப்படும் ஒரு சில விஷயங்களுடன் எனக்கு ஒப்புதல் கிடையாது.

எனக்கு இந்தக் கதைகளின் மீது பற்றுதல் இருந்தாலும், ஈர்ப்பு இல்லாததற்கு மற்றும் ஒரு காரணம்- இந்தக் கதைகளில் பெண் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு. அதற்காக நான் ஒரு "Feminist" என்று கொடி தூக்கவில்லை. எனக்கு அந்த சித்தாந்தத்தில் அவ்வளவாக ஈடுபாடும் கிடையாது. ஆனாலும்- ஒரு சில சமயங்களில், ஒரு சில விஷயங்கள்- இந்தக் கதைகளில், என் புரிதலுக்கு அப்பால் இருப்பது, கொஞ்சம் வருத்தம். "காலகட்டம்", "தேவ ரஹசியம்" என்றெல்லாம் எத்தனை விதமாக இந்த விஷயங்களை ஞாயப் படித்தினாலும்- என்னால் அவைகளை ஏற்க முடியவில்லை.

அதுபோகட்டும். மகாபாரத கதை- இரண்டு, மூன்று எழுத்தாளர்களின் பாணிகளில் படித்த அனுபவம் உண்டு. ஒவ்வொரு முறை படித்த போதும் ஒவ்வொரு அனுபவம் ஏற்படும். எத்தனை எத்தனை மனிதர்கள். எத்தனை எத்தனை எண்ணங்கள். எண்ணப் போக்குகள். ராஜாஜி-யுடைய மகாபாரதமே முழுமையான ஒரு மகாபாரதக் கதை படித்த உணர்வு அளித்தது. ஆனாலும்- இவை எந்த பரிமாணமுமே- இந்தக் கதையின் பெண் கதாபாத்திரங்களுக்கு உரிய/தகுந்த மதிப்பை அளிக்கவில்லை- என்ற குறை மட்டும் மீதம் இருந்தது. இத்தகைய ஒரு சந்தர்பத்தில் தான், சமீபத்தில் Chithra Banerjee Divakaruni அவர்கள் எழுதிய "The Palace of Illusions" என்ற புத்தகம் படிக்க நேரிட்டது.

ஒரு புது விதமான பாரதம். இப்படி நடந்ததோ- என்று எனக்குத் தெரியாது. ஆனால்- இப்படியும் நடந்திருக்கலாம்- என்றுத் தோன்றியது. இதில் என்ன புதுமை? மகாபாரத்தின் நாடி- த்ரௌபதி. அவள் கதை இது. இதற்கு முன்னர் நான் படித்திடாத கதை இது. ஒரு பெண்ணால் ஆன/அழிந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கதையை- அவளே கூறுவது தானே தகும்? அது தான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

எதிர் பாராத தருணத்தில் ஜனித்த மகள். அவளது பிறப்பின் பயன் யாது- என்று வியந்த அவள் உறவுகள். தமது அவமானத்திற்கு பழி தீர்த்துக் கொள்ள பெற்ற மகனுடன்- ஏன் இப்படிப்பட்ட ஒரு மகள் நமக்கு? என்று வியந்த தந்தை. மணக்கப் போகும் கணவர் யார் எனத் தெரியாத மணமகள். மணந்த கணவனுடன் சேர்த்து, நால்வர்- அவனது சஹோதரர்களுக்குப் பங்கு போடப்பட்ட மனைவி. மயன் அமைத்த "மாயா மாளிகை"யின் மகாராணி. கணவர்களாலும், சொந்தங்களாலும், ஞாயமெனும், தர்மமெனும் காரணங்கள் பல கூறி கை விடப்பட்ட ஒரு பெண். கணவர்கள் ஐந்து பேர் இருக்க- ஆறாவதாக ஒருவரின் மீது ஏன் இந்த லயிப்பு? என்பதற்கு விளக்கம் தேடும் ஒரு பெண்ணின் பயணம்- இந்த "The Palace of Illusions".

ஒரு கணவனை விட்டு, அடுத்த வருடம், அடுத்த கணவனுக்கு மனைவியாகப் போகும் தருணங்களில்- பரிபூரணமாக அவனுக்குச் சொந்தமானவள் ஆவாள்- என்று வ்யாசர் அளித்த வரம். இந்த வரத்தைக் காட்டிலும்- அடுத்த கணவனிடம் செல்லும் தருணத்தில்- முந்தைய கணவனுடன் கழித்த நினைவுகளை மறக்க இயலும்படியான வரம் அளித்திருக்கக் கூடாதோ- என்கிறாள்! த்ரௌபதியின் மன நிலையை இதை விட அழகாக நான் இது வரை எந்த பாரதத்திலும் படித்திருக்கவில்லை. ஒரு பெண்ணாக அவளை முன்னே வைத்து அவளை இப்படி யாரும் சித்தரிக்கவும் இல்லை.

கர்ணன், அவளது சுயம்வரத்தில் பங்கேற்க முயல்கிறான். அவன் மீது ஒரு விதமான ஈர்ப்பு. அவனைப் பார்க்கவோ, அவனைப் பற்றி ஆர்வம் கொள்ளவோ தடை விதிக்கப் பட்டிருந்தாலும்- தடை விதிக்கப் பட்டிருக்கும் எந்த ஒரு விஷயத்தின் மீதுமே இயல்பாக இருக்கக்கூடியதொரு ஈர்ப்பு. திருஷ்டத்யும்னன் கர்ணனைத் தடுக்க- கௌரவர்கள் கர்ணனுக்கு ஆதரவு தர- குடும்பத்தின் மானம் காத்திட, போர் புரியவும் தயாராக த்ரௌபதிக்கு முன்னே நிற்கும் அவள் அண்ணனைப் பார்க்கிறாள். தூண்டில் புழுக்களாக வளர்க்கப் பட்டவர்கள்- அவள் அண்ணனும், அவளும்; பழி தீர்த்துக்கொள்ள... உலகெங்கும் தன் புகழ் பரப்ப... அவள் மீது உண்மையாகவே அன்பு கொண்டவனாக இருந்தவன் அவள் அண்ணன் மட்டுமே. கௌரவ சேனையுடன் போரிட்டு அவன் மீளுவது கடினம். அது அவனுக்கும் தெரியும். இந்த சந்தர்பத்தில்- அவன் உயிர், கர்ணனின் மீதிருந்த அந்த லயிப்பை விட உயர்ந்து நின்றது. "தங்கள் தகப்பன் பெயர் கூறிவிட்டு போட்டியில் கலந்து கொள்ளுங்கள்"- என்று கர்ணனிடம் அவள் கூறியது, அவள் வாழ் நாள் முழுவதும், அவளைத் துரற்றியது. இப்படியொரு விளக்கம்- அவளது கேள்விக்கு- நான் இது வரையில் படித்திடவில்லை. இப்படிதான் அவள் மனதில் தோன்றியிருக்கும். அவள் கர்வம் கொண்டவள்-அல்ல. தருணம் அப்படி. அந்தத் தருணத்தை, இப்படி யாரும் வருணிக்கவில்லை.

கீசகன். இப்படியும் ஒரு உலகம். ராஜகுமாரியாக, ராணியாக இருந்த நான்- இப்படி ஒரு பணிப்பெண்ணாக! இப்படியா நடத்தப் படுகிறார்கள்- சாதாரணப் பெண்கள்? அரண்மனை ஆண்கள் இவர்களை இப்படியா பார்க்கிறார்கள்? நான் இந்த சூழ்நிலைகளிலிருந்து மீண்டு, மீண்டும்- மகாராணியானால்- என் மாளிகையில் பணிபுரியும் சாதாரணப் பெண்களுக்கு இப்படிப் பட்ட கஷ்டங்கள் வராமலிருக்கச் செய்வேன்- என்று நினைக்கிறாள்- த்ரௌபதி. இதுவரை நான் படித்திருந்த பாரதக் கதைகளில், இது வெறும் ஒரு அத்யாயம். ஆனால் இங்கு- இது ஒரு கதாபாத்திரத்தின் ஜனனம். பிற்காலத்தில், ஒரு பெரும் ராணியாக போற்றப்படப் போகும் ஒரு ராணியின்- ஜனனம்.

நான் மலையிலிருந்து விழுந்த தருணம்- பீமன் பதறியது. "அவள் ஏன் விழவேண்டும்"? என்று யுதிஷ்டிரரைக் கேட்டது. "நம்மை அவள் மணந்தாள்- ஆனால் ஒருவரின் மீது அவள் அதிகம் அன்பு கொண்டாள்". என்று அவர் பதில் கூற- என் மீது அதிகம் பிரேமை கொண்ட பீமன்- "யார்"? எனக் கேட்க- கொஞ்சம் பொறுத்தார், யுதிஷ்டிரர். என்னைப் பற்றி யாரும் அறிந்திட முடியாத ஒரு ரஹசியம்- என்று என்னில் நான் கொண்ட கர்வம்! யுதிஷ்டிரரின்- மனிதர்களை புரிந்து கொள்ளும் ஆற்றலின் மீது என்றைக்குமே எனக்கு பெரிய மதிப்பு இருந்ததில்லை. அவரை நான் புரிந்துகொண்டதில் தான் தவறிவிட்டேன். நான் ஏன் பதறுகிறேன்? அவர் கூறப் போகும் பதிலின் மீது- ஏன் இத்தனை ஆர்வம், எனக்கு? என்னைப் பற்றி அவர் புரிந்து கொண்ட விவரத்தை அவர்க் கூறுவாரா? இந்த தருணத்திற்குப் பிறகு என் கணவர்களை நான் பார்க்கப் போவதுமில்லை. பிறகு ஏன் என்னைப் பற்றின அவர்களின் கடைசி அபிப்ராயத்தைக் கேட்டிருக்க இத்தனை ஆவல்? "அர்ஜுனன்..." என்றார். சத்தியத்தை விடவும், இரக்கமே பெரிதென எண்ணினார்- அவர். என் கீர்த்திக்கு பங்கம் நேராமல் காக்க- அவர் வாழ்நாளில்- அவரது இரண்டாவது பொய்யை, எனக்காகக் கூறினார்...

வாழ்கை என்பது, ஒரு சில சம்பவங்கள்- பல பல உணருதல்கள். த்ரௌபதியின் வாழ்வில் அவளுக்கு நிகழ்ந்த/அவளால் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களைப் பற்றியே இது வரை படித்ததுண்டு. ஆனால்- அவளது வாழ்க்கையைக் கண்டது, அவள் உணர்ந்தவைகளை அவளுடன் சேர்ந்து நானும் உணர்ந்து, அவளுடன் வாழ்ந்தது- இதுவே முதல் முறை!

பாரதக் கதையில்- எத்தனையோ கதா பாத்திரங்கள். பெண் கதாபாத்திரங்களின் பெயர்களை ஒரு பட்டியல் எடுத்தால் எத்தனை பெயர்கள் வரும்- என்று கணக்கு போடலாமே. த்ரௌபதி, குந்தி, காந்தாரி, சுபத்திரை, அம்பா, சுதேஷ்ணா, பானுமதி, உத்தரா, சத்யவதி, கங்கா... வேறு பெயர்கள் தோன்றவில்லை. சரி. இந்தப் பட்டியலில்- எத்தனைப் பெண் கதாபாத்திரங்கள்- தங்களை பாதித்தன? தங்கள் மனத்தைக் கவர்ந்தன? அப்படி பாதித்தது/கவர்ந்தது- என்றால்- அது ஏன்? இதே- பெண் கதாபாத்திரங்கள் என்று சுருக்கிக் கொள்ளாமல்- மகாபாரதம்- என்று எடுத்துக் கொண்டோமேயானால்- எத்தனையோ கதாபாத்திரங்கள் கூறலாம். கர்ணன், அபிமன்யு, கிருஷ்ணன், பீஷ்மர், பீமன், ஏகலைவன், கடோத்கஜன்- என்று. ஆனால்- இந்த புத்தகம் படித்த பிற்பாடு- கர்ணன்/கிருஷ்ணன் மீது கூட ஏற்படாத அளவிற்கு ஒரு ப்ரீத்தி- த்ரௌபதியின் மீது எனக்கு ஏற்பட்டு விட்டது. ஒரு சில சமயங்களில், மிகவும் வருத்தமாகவும் இருக்கும். ஒரு பெண்ணாக- என்னால் ஏன் இந்த கதாபாத்திரத்தை புரிந்து கொள்ள இயலவில்லை- என்று. இந்த புத்தகத்தில்- என் கேள்விக்கான விடை கண்டுகொண்டேன் :: இது வரையில்- அவளை ஒரு பெண்ணாக- யாரும் சித்தரிக்கவில்லை. இது தான் விடை. இது தான் உண்மை...

This entry was posted on 03 July, 2011 at Sunday, July 03, 2011 . You can follow any responses to this entry through the comments feed .

33 comments

உண்மைதான். பிறப்பிலிருந்து. திருமணம், இறப்புவரை எல்லாமே திரௌபதி அம்மனுக்கு வித்யாசம்--அமானுஷ்யம்தான் ஈர்ப்பு ஏற்படுத்தியிருக்கலாம் அனைவருக்கும்.

3 July 2011 at 13:56

அன்பின் மாதங்கி! என் நண்பரொருவர் நீங்கள் குறிப்பிட்ட கதையை ஒரு ஆணின் பார்வையில் விமரிசித்து,என்னைப் படித்து கருத்தையும் சொல்லச் சொன்னார்.. படித்தால் என்னுள்ளே சில பிம்பங்கள் உடைந்து விடும் என்று அஞ்சினேனோ தெரியவில்லை... படிப்பதைத் தள்ளிப் போட்டிருந்தேன்.. இனி முதல் வேலை அதைப் படிப்பதுதான். உங்களின் பலகேள்விகள் எனக்கும் தோன்றியதுண்டு..நல்லதோர் பதிவு

3 July 2011 at 14:11

//வாழ்கை என்பது, ஒரு சில சம்பவங்கள்- பல பல உணருதல்கள்.//
உண்மைதான். வால்மீகியோ, வியாசரோ அவர்கள் உணர்ந்ததைத்தான் எழுதியிருக்க வேண்டும். அவரவர் பார்வையில் முன் சொல்லப்பட்டவைகளுக்கு முரண்கள் நேரலாம். நம் வாழ்க்கையையே அப்படியே எழுதிவைத்து பின்னொரு நாளில் வேறு யாரேனும் படிக்க நேர்ந்தால் அதிலும் முரண்பாடுகள் கண்டுபிடிக்கலாம். நாமே இப்போது நம் வாழ்வின் பழைய நிகழ்வுகளுக்குக் கண்டுபிடிப்பதைப் போல.

3 July 2011 at 17:09

"Three Sides of Life - Short stories by Bengali Women Writers" புஸ்தகத்தில் வரும் "The Aftermath" by "Nabaneeta Dev Sen" படித்ததுண்டா? ராம லக்ஷ்மண, லவ, குசர்களை வைத்துக் கொண்டு ஒரு ரகளை செய்திருப்பார். லச்சுமனுல்லாவாக மதம் மாறிய லக்ஷ்மணன் மகனும், லவ குசர்களும் சண்டையிடுவதிலிருந்து ஆரம்பித்து அசத்தியிருப்பார். தமிழ்ப் படுத்தலாம் என்று நினைத்தேன். தவறாக ஆகிவிடும் என்று அஞ்சி கை விட்டேன்.

நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் இதுவும் அருமை. படிக்க முயலுகிறேன். நன்றி. ;-))

3 July 2011 at 18:19

மஹாபாரதம் நீண்ட நெடும் பல் கதை தொகுப்பு.இப்படி எடுத்து ஒர் ஆய்வு செய்வதென்றால் ஒரு பெரும் வாசிப்பு நடந்திருக்க வேண்டும்..

நான் கவிநயம் கருதி பாரதியின் பாஞ்சாலி சபதம் மட்டும் தான் படித்துள்ளேன்..

இக்கதையை எடுத்து மற்றுமோரு புதிய கோணத்தில் ( ஆணாதிக்க / பெண்ணியம் தவிர்த்து ) சொன்னவிதம் அக்கதையை தேடி படிக்க தோன்றுகிறது..

உங்கள் அசாத்தியமான வாசிப்புத்திறனுக்கு வாழ்த்துகள்...

3 July 2011 at 18:37

இப்பொழுதுதான் கேள்விப் படுகிறேன் . படிக்க முயல்கிறேன்.

பதிவின் ஹ்ருதயதிர்க்கு சம்பந்தம் இல்லாத பதில் ...

அக்னி பிரவேஷம் , சீதைக்கு சோகத்தை ஏற்படுத்தவில்லை. ராமரின் மனதை பரிப்பூர்ணமாக அறிந்தவள் சீதை. மேலும், புராணங்களை நாம் படிக்கும்பொழுது இன்றைய நவ உலக மனதை ,சிந்தனைகளை கழட்டி வைத்து விட்டு படிக்கவேண்டும்.

இன்றைய சிந்தனையில் அன்றையக் காலகட்டத்தை பார்க்கக் கூடாது. பல அறிவுஜீவிகள் செய்கின்ற வேலை அது.

இதைப் பற்றி சில மாதங்கள் முன்பு ஒருப் பதிவு எழுதினேன் . அதைப் படித்தீர்களா என்றுத் தெரியவில்லை. எதற்கும் பார்க்கவும்

http://lksthoughts.blogspot.com/2011/03/blog-post_08.html

4 July 2011 at 07:17

இரு பெரும் இதிகாசங்களுக்குமே ஆதாரப் புள்ளி பெண்தான்.

அந்தக்காலத்தின் மனம் ஒரு ஆணின் வழியே ஒரு பெண்ணைப் பார்த்ததே தவிர பெண்ணுக்கென ஒரு மனமும் பார்வையும் இருந்தது என்று தோன்றவில்லை.

மனிதனின் பெரும் பாரம் அவனது சிந்தனைதான்.

ஆதரமான பல சிந்தனைகளை அசைத்துப் பார்த்த பதிவு.

4 July 2011 at 10:53

ராமாயணம் & மஹாபாரதம் மூலமாக நாம் அடையும் நல்ல விஷயங்கள் மற்றும் அனுபவ பாடங்கள் ஏராளம். அதிலும் சில விஷயங்கள் மிகவும் நுட்பமாக மறைந்து இருக்கும். ராமன் இஞ்சி நீரா அல்லது சுக்கு நீரா என்று சாமர்த்தியமாக பேசியவர்களுக்கு கூட அதில் வரும் தாடகை வதம் உதவுவது போல நம் வாழ்வுக்கும் உதவுகிறது. உங்களுடைய இந்த கோணம் பிரமிக்க வைக்கிறது.

(ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா! சீரியஸான ஒரு கமண்ட் போடர்துக்கே எனக்கு நாக்கு தள்ளுது! மேம் சாஃப் எப்பிடிதான் முழு பதிவு எழுதறாங்களோ!!!)

4 July 2011 at 12:48

அழகான உங்கள் விமர்சனம் புத்தகத்தைப் படிக்க ஆவலைத் தூண்டுகிறது.

4 July 2011 at 20:25

அழகான அறிமுகம் . படிக்க தூண்டியிருக்கிறீர்கள்

4 July 2011 at 22:46

இந்த போஸ்ட் படிச்சு எனக்கும் அந்த புத்தகம் படிக்கணும்னு ஆர்வம் வந்துடுச்சு மாதங்கி... எவ்ளோ அழகா கோர்வையா, அனாவிசியமா ஒரு வார்த்தை கூட அதிகம் இல்லாம, ஆனா படிக்கறவங்களுக்கு பரிபூரணமா உணர வெக்கற எழுத்து... I really envy you... great write up... கர்ணன்/திரௌபதி விஷயம் படித்ததில்லை இதுவரை... நல்ல பகிர்வு மாதங்கி... தேங்க்ஸ்

5 July 2011 at 22:33

வியக்கத்தக்க விமர்சனப் பார்வை.புதிய புத்தகத்தின் அறிமுகம் எனக்கு
தங்கள் அறிமுகத்தோடு கிடைத்துள்ளது.ஆழ்ந்த வாசிப்பனுபவத்தோடு
கூடிய எழுத்து.பகிர்விற்கும் படிக்க ஆர்வத்தை எழுப்பியதற்கும் நன்றி.

6 July 2011 at 07:31

மாதங்கி, திரெளபதி குறித்த உங்கள் வாசிப்பு அநுபவம் வியப்பாக இருக்கிறது. நிச்சயமாக திரெளபதி ஐந்து பேரை மணந்ததால் அனைவரின் கவனத்துக்கும், இகழ்ச்சிக்கும், கேலிக்கும் ஆளானவள் தான். கர்ணன் ஒன்றும் அவளைக் குறித்துப் பெருமையாக நினைத்ததால் பாரதத்தில் எங்கேயுமே சொல்லப்படவில்லை. அதேபோல் கர்ணனை திரெளபதி மணந்து கொள்ள நினைத்ததாகவும், ஐந்து பேர் போதாமல் ஆறாவது ஒருவரின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் பாரதத்தில் எங்கேயும் கூறவில்லை.

6 July 2011 at 09:31

நீங்கள் வாசித்த புத்தகம் அந்த எழுத்தாளரின் கோணத்திலிருந்து பார்க்கப்பட்டு எழுதப் பட்டது தான். பலரும் பல விதங்களில் திரெளபதியின் கதாபாத்திரத்தை அலசி இருக்கிறார்கள். அது போல் இது திரெளபதியின் கோணத்தில் அலசப்பட்டது.

அதோடு ஒரு வருடத்திற்குப்பின்னர் மற்றொரு கணவனிடம் வாழ்க்கை நடத்துகையில் முந்தைய கணவனோடு இருந்த நினைவுகளைத் தவிர்க்க முடியவில்லை; அதற்கு வியாசர் வரம் கொடுத்திருக்கக் கூடாதா? என்று திரெளபதி நினைப்பதாகவும் நீங்கள் படித்த கதையில் வருகிறது. அதற்கு விடை வியாசர் கொடுத்த வரத்திலேயே உள்ளது. அதிலேயே முழுமையாக எல்லாம் அடங்கி விடுகிறது.

6 July 2011 at 09:33

திரெளபதியின் இந்த ஐந்து கணவர்களைத் திருமணம் செய்து கொள்வது என்பதற்கு நம் புராணங்களிலேயே சதி நளாயினி தான் கணவனான ரிஷியின் பல்வேறுவிதமான பரிசோதனைகளுக்குப் பின்னர் அவரோடு இல்வாழ்க்கை வாழ ஆரம்பித்தாள். சிறிது கால இல்வாழ்க்கைக்குப் பின்னர் ரிஷியானவர் மீண்டும் தவ வாழ்க்கைக்குப் போக விரும்ப நளாயினிக்கோ இல்வாழ்க்கையில் நிறைவடையவில்லை என்ற எண்ணம். கணவரை வேண்ட, அவரோ இப்பிறவியில் இவ்வளவு தான் இல்வாழ்க்கை அநுபவம் எனவும், அடுத்த பிறவியில் தாமே ஐந்து தனிநபர்களாகப் பிறந்து வந்து அவளைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறுகிறார்.

நளாயினி கொஞ்சம் கவலைப்பட்டுப் போய் தவம் இருக்க, கண்ணெதிரே தோன்றிய ஈசன்,"என்ன வேண்டும்?" என்று கேட்க, அவசரப்பட்ட நளாயினி, ஐந்து முறை நல்ல கணவன் வேண்டும் என்று வேண்ட, அவ்விதமே ஐந்து கணவர்கள் வாய்ப்பார்கள் என வரம் கிடைக்கிறது. மீண்டும் கவலை அடைந்த நளாயினியிடம் அடுத்த பிறவியில் அவள் சக்தியின் அம்சமாய்ப் பிறப்பாள் எனவும், பஞ்ச பூதங்களையும் கணவனாக அடைவாள் எனவும், ஆறுதல் கூறுகிறார் ஈசன். இது தான் திரெளபதிக்கு ஐந்து கணவர்கள் கிடைத்த காரணம்.

இன்னொரு கோணத்தில் நம் உடலின் பஞ்சேந்திரியங்களையும் பாண்டவர்களாகவும், திரெளபதியை ஜீவாத்மாவாகவும் கூறுவதுண்டு. ஜீவாத்மாவுக்குள் பஞ்சபூதங்களும் அடக்கமாகிக் கடைசியில் பரமாத்மாவோடு ஐக்கியமாவதையே திரெளபதி ஐந்து கணவர்களை மணந்ததற்கு உதாரணமாகக் கூறுவார்கள். இது குறித்து கர்நாடகாவின் ஜி.வி. ஐயர் என்பவர் ஒரு திரைப்படமாக சம்ஸ்கிருதத்தில் எடுத்து ஆங்கில சப் டைட்டில்களோடு வெளியிட்டிருக்கிறார். அந்தப் படம் கிடைத்தால் ஒரு முறை பார்க்கவும். உங்கள் சிந்தனைத் தெளிவுக்கு மிகவும் உதவும்.

6 July 2011 at 09:40

ஒரு கணவனை விட்டு, அடுத்த வருடம், அடுத்த கணவனுக்கு மனைவியாகப் போகும் தருணங்களில்- பரிபூரணமாக அவனுக்குச் சொந்தமானவள் ஆவாள்-//

பரிபூரணமாகச் சொந்தம் ஆவாள் என்னும்போது முந்தைய கணவனைக்குறித்த நினைவுகள் எவ்வாறு வரும்?? அப்புறம் வியாசர் கூறியதற்கு அர்த்தமே மாறிப் போகிறது அல்லவா??

6 July 2011 at 09:43

ராஜராஜேஸ்வரி கூறுவது போல் திரெளபதி அம்மனும், மஹாபாரதத்தின் திரெளபதியும் ஒருவர் அல்ல என்று கேள்விப் படுகிறேன். இது குறித்துத் தகவல்கள் சேகரித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் பகிர்வேன். நன்றி, வணக்கம்.

6 July 2011 at 09:44

கீதா mam ... உங்க favourite topic இது-ன்னு நினைக்கறேன்... :)

ஆனா- நான் இத ஒரு 'book review' வா மட்டுமே எழுதியிருக்கேன்.

நீங்க சொல்லற எல்லா விஷயங்களும் நானும் முன்னாடி படிச்சிருக்கேன். கர்ணன்-த்ரௌபதி சமாசாரம்-- ஒண்ணு ரெண்டு தடவ கேள்வி பட்டதுண்டு. ஆனா- பாரதத்துல அப்படி வருதா, தெரியாது. எதோ ஒரு ஸ்வர்ண பழம்-- மரத்திலேர்ந்து கீழ விழுந்துடுமாம். அப்போ-- துர்வாசரோ/அமித்ரரோ ... யாரோ.. ஒரு ரிஷியோட சாபம் படாம இருக்க-- பஞ்ச பாண்டவா-த்ரௌபதி எல்லாரும் ஒவ்வொரு உண்மை சொல்லுவாளாம். சொல்ல சொல்ல-- பழம்- கொஞ்ச கொஞ்சமா மேல- ஏறுமாம். த்ரௌபதி - 5 பேரையும் பிடிக்கும்-கும் போது, பழம் கீழ விழுந்துடும். அவோ-- ச்வயம்வரத்துல- கர்ணன பிடிச்சுது-ன்னு சொல்லவும், மறுபடியும் மரத்துல பொய் ஒட்டிண்டுருமாம். இப்படியும் ஒரு கத கேள்வி பட்டிருக்கேன். இது இந்த புக்-ல இல்லாதது.

"..."Virginity" ங்கற concept ல வரம் கொடுத்தத விட- முந்தைய husband கூட கழித்த நினைவுகள மறக்கக்கூடிய வரம்..."-னு எழுதியிருக்கற writer ஓட perspective அழகா இருந்தது... ஒரு பெண் - அப்டீங்கற point of view ல த்ரௌபதி ய நிறுத்தி வெச்சாப்ல இருந்துது. இது எனக்கு பிடிச்ச ஒரு இடம்- இந்த புக் ல.

புக்-அ படிச்சுட்டு கொழந்தைகளுக்கு கத சொல்லராப்ல ஒரு புக்- கிடையாது இது. உங்கள போல "Purists" கிட்டயும் எடுபடுமா- தெரியல. ஆனா-- இந்த புக்-ல கடவுள்/மாயை/magic ... போன்ற விஷயங்களுக்கு-- கம்மி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு-- ஒரு கதாபாத்திரத்தினுடைய மனப் போக்கிற்கு/ அந்த கதா பாத்திரத்தினுடைய moulding கு முக்கியத்தும் அளிக்கப்பட்டிருக்கு.

இது எனக்கு ரொம்ப பிடிச்சுது.

- மாதங்கி மாலி

6 July 2011 at 22:38

Dear Mathangi,
different view. from a woman's viewpoint Dhraupathi involes all the anger of a burnt woman.
leave alone the mythological reasons. very deep thoughtful,emotional and a rare insight. I am talking abt you:)

7 July 2011 at 17:22

மாதங்கி
நான் நீங்கள் குறிப்பிட்ட Palace of Illusions புத்தகம் படித்ததில்லை. ஆனால் மகாபாரதம் குறித்த எனது வாசிப்பில் (வியாசரின் மூலம் மற்றும் ராஜாஜியின் வியாசர் விருந்து) எதிலுமே திரௌபதி கர்ணன் மீது மோஹம்/பிரேமை கொண்டதாகப் படிக்கவில்லை. நமது ஹிந்து மதத்தில் ஒரு advantage/disadvantage ரெண்டுமே - அதில் ஒரு flexibility உள்ளது. அதனால் அவர் அவர் அவர்களின் கண்ணோட்டத்தில் எழுதி விடுகிறார்கள். இதனால் சில கால கட்டத்திற்குப் பிறகு அதுவே உண்மை என்று மற்றவர்கள் நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். நீங்களும் அந்த தவறை செய்ய வேண்டாமே.

ராமாயணம், மகாபாரதம் ரெண்டிலும் கதையின் முக்கிய பாத்திரம் பெண் இல்லை. முன்னதில் ஸ்ரீ ராமர், பின்னதில் அவ்வாறு ஒருவரை சொல்ல முடியாது - அது ஒரு பரம்பரையின் கதை. ஆனாலும் தேவைப்பட்ட இடங்களில் அப்பாத்திரங்கள் strong willed ஆகத் தான் படைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ ராமர் வனவாசம் செல்லும் போது சீதை சண்டையிட்டுத் (நான் சொல்வது domestic squabble) தான் அவரோடு சென்றாள். அதே போல திரௌபதியும் பாண்டவர்களிடம் சில இடங்களில் அவ்வாறு சண்டை இட்டுல்லாள் - வன பர்வாவில் தன மீது ஆசை கொண்ட ஜராசந்தனை கொல்ல வேண்டும் என அவள் பாண்டவர்களிடம் கூறுகிறாள். தருமரோ அவன் தங்களின் மாப்பிள்ளை (அவன் கௌரவர்களின் சகோதரி துஷலையின் கணவன் ) என்று தடுக்கிறார். வஸ்த்ர அபஹரிப்பின் போதும் அந்த இயலாமையிலும் அவள் நன்றாகவே போராடினாள். சபை பெரியவர்களிடம் ஞாயம் கேட்கிறாள்.
அப்பொழுது கர்ணன் முந்தய கோபத்தை மனதில் வைத்து அவளை பரிகசிக்கின்றான்.
விராட தேசத்தில் அரச சபையில் சேடிப் பெண்ணாக தான் கீசகனிடம் கஷ்டப்பட்டதால் தான் பின்னாளில் அவள் அரசியான பின் ஒவ்வொரு சேடிப் பெண்ணின் பெயரையும் தெரிந்து வைத்துக் கொள்ளும் அளவு அன்யோன்யமாக இருக்க வைத்தது.
நீங்கள் குறிப்பிட்ட தருமரின் ரெண்டாவது பொய்யும் எங்கும் மூலத்தில் இல்லையே. ஸ்வர்க்க ஆரோகன பர்வாவில் முதலில் மலையில் திரௌபதி கீழே விழுகிறாள். பீமன் பதறி தருமரிடம் எந்த தவறும் செய்யாத அவளுக்கு என் இந்த நிலை எனக் கேட்கிறான். அதற்கு தர்மர் அவள் ஐந்து கணவர்களை பெற்றிருந்தாலும் ஒருவரிடம் அதிகம் மோஹம் கொண்டிருந்தால் எனக் கூறுகிறார். யார் என பீமன் கேட்டதற்கு அர்ஜுனன் என்று கூறுகிறார். அதில் பொய் எதுவும் இல்லை - அவர் எதையும் மாற்றியும் கூறவில்லை.
திரௌபதி பஞ்ச கன்னிகளில் ஒருத்தியாகக் கருதப்படுகிறாள் - குந்தி, திரௌபதி, அகல்யா, தாரா மற்றும் மண்டோதரி. ஐந்து கணவர் இருந்தும் தினமும் ஸ்நானம் செய்தவுடன் திரௌபதி கன்னித்தன்மை அடைகிறாள். எனவே அவள் பழைய நினைவுகளை அகற்றும் வரம் எதிர்பார்த்தாள் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.
பெண்ணகளின் நிலையை குறித்து ஒரு பர்வாவே மகாபாரதத்தில் உள்ளது - ஸ்த்ரீ பர்வா. மூன்று பெண்களின் நிலையை இது விளக்குகிறது - காந்தாரி, குந்தி மற்றும் திரௌபதி. மூவருமே அப்பொழுது புத்திர சோகத்தில் இருந்தவர்கள். ஒரு பெரும் காப்பியத்தில் தேவையான அளவு பெண்களின் பாத்திரப் படைப்பு உள்ளது.

சீதையின் அக்னி பிரவேசம் குறித்தும் பல்வேறு காரணங்கள் உள்ளன - அந்த காலத்திய வழக்கங்கள், மற்றும் வேதவதி சீதையாக இலங்கை சென்றதும், சீதை அக்னி மற்றும் ஸ்வாஹவின் பாதுகாப்பில் இருந்ததும், அவள் மீண்டும் தன் உருவில் வரவே அக்னி பிரவேசம் என்று பல விளக்கங்கள் உண்டு.

ஒரு fiction ஆக இந்த Palace of Illusions கதையை படிக்கும் போது தவறில்லை. ஆனால் அது சில அடிப்படை விஷயங்களையே மாற்றும் போது நாம் கவனம் கொள்ள வேண்டும். உங்களின் review நன்றாக உள்ளது - ஆனால் நீங்கள் மூலக் கதையை ஓட்டிச் செல்லும் ஒன்றை படிக்க வேண்டும் எனப் பிரியப்படுகிறேன்.

sorry for my lengthy reply.

8 July 2011 at 05:56

@ கீதா பாட்டி & கோபாலன் அண்ணா - மாதங்கி இதை ஒரு புத்தக விமர்சனமாகவே அளித்துள்ளார். நம்ப வல்லிம்மா அழகாக சொன்னது போல, தவம்-வரம்,மாயாஜாலம்,கத்ரிக்காய் & எல்லாத்தையும் விட்டுட்டு மாறுபட்ட ஒரு கோணமாக மட்டுமே பார்ப்போமே!...:)

9 July 2011 at 13:47

@தாக்குடு, என்னோட பதிலில் அதை நான் ஏற்கெனவே சொல்லி விட்டேன். :P:P:P:P


//நீங்கள் வாசித்த புத்தகம் அந்த எழுத்தாளரின் கோணத்திலிருந்து பார்க்கப்பட்டு எழுதப் பட்டது தான். பலரும் பல விதங்களில் திரெளபதியின் கதாபாத்திரத்தை அலசி இருக்கிறார்கள். அது போல் இது திரெளபதியின் கோணத்தில் அலசப்பட்டது.//

இதுக்கு என்ன அர்த்தம் எடுத்துண்டீங்க?? :P:P:P:P

தவம், வரம், மாயாஜாலம் எல்லாத்தையும் இன்னமும் இவ்வுலகம் விடலை என்பதை தினம் தினசரிகளைப் பார்த்தாலே புரியும். புத்தக விமரிசனமே இது. மாதங்கி அதை அப்படித் தான் பார்க்கிறார். ஆனால் எல்லாரும் பார்க்கிறதாய்ச் சொல்ல முடியாது. இதைப் படித்த சிலர் சுட்டிக் காட்டி சந்தேகங்களையும், கேள்விகளையும் எனக்குத் தனிமடலில் எழுப்பியதாலேயே நான் பதில் கூறினேன். மாதங்கியும் அதை என் கோணத்தில் இருந்து புரிந்து கொண்டிருக்கிறார். அது அவருடைய மன முதிர்ச்சியைக் காட்டுகிறது

9 July 2011 at 16:27

உண்மையில் இப்படி ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு அதை வெறும் புத்தகம் என்ற அளவிலே மட்டும் எடுத்துக்கொள்ளவே நிறைய மன முதிர்ச்சி தேவை. ஏனெனில்
இம்மாதிரியான எண்ணப்போக்கு இப்போது வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கலாம்; இப்போதும் பலரால் ஏற்க இயலாது.

9 July 2011 at 16:29

பாரதி திரெளபதியை சக்தியாகப் பார்த்தார்; பாரதமாதாவாகப் பார்த்தார்; திரெளபதியைக் கெளரவர்கள்அவமானம் செய்ததை நம் பாரத மாதாவுக்கு அந்நியர்கள் செய்த அவமானமாக, அநீதியாகப் பார்த்தார்; பாஞ்சாலி சபதம் எழுந்தது.

எல்லாருமே பாரதியின் கோணத்தில் பார்க்க இயலுமா?

9 July 2011 at 16:31

அன்பின் மாதங்கி, ராமாயணம் மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள் மக்களுக்கு சில படிப்பினைகளை கதைகள் மூலமாக உணர்த்துவதற்காக ஏற்படுத்தப் பட்டவை . நல்ல படிப்பினைகளை எடுத்துக் கொள்ள நமக்கிருக்கும் பகுத்தறிவு நமக்கு ஒவ்வாதவற்றை ஒதுக்குவதிலும் உண்டு. சில கதைகளின் சாராம்சம் எல்லா காலங்களுக்கும் ஒத்துவராது. அவற்றை வெறும் கதை என்று விட்டுவிட வேண்டும். ஏன் மாதங்கியே கூட ஒரு மஹாபாரதம் எழுதலாம். காலத்துக்கும் நம் மனோபாவங்களுக்கும் ஏற்றார்போல் எழுதலாம். வால்மீகியிடமிருந்து கம்பன் வேறுபடவில்லையா, அதுபோல. இந்தக் கதைகளுக்கு காப்பி ரைட்ஸ் ஏதும் கிடையாது. நீங்கள் படித்தகதை திரௌபதியின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதை நீங்கள் ரசிக்கவில்லையா,? அதுபோல கற்பனை கலந்த பாத்திரப் படைப்பு சிலரால் ரசிக்கப்படலாம். சில ப்யூரிஸ்டுகளால் தூற்றப்படலாம்.என்னைப் பொறுத்தவரை கதைகளை பொறுத்தவரை இது சரி இது தவறு என்று ஏதுமில்லை. வித்தியாசமான சிந்தனைக்குப் பாராட்டுக்கள்.

12 July 2011 at 18:40

@ கீதா பாட்டி -

//அது அவருடைய மன முதிர்ச்சியைக் காட்டுகிறது// அழகான வார்த்தை கீதா பாட்டி!

மாதங்கியின் மனமுதிர்ச்சியில் எனக்கும் எப்போதுமே நம்பிக்கை உண்டு. அவர் எப்போதுமே "இதுவாக இருக்குமோ? அதுவாக இருக்குமோ?"னு ஒரே சமயத்தில் பத்து விஷயம் பேசி குழப்பமாட்டார்...:PP

மாதங்கி சொன்னது போலவே இது உங்களோட ஏரியா என்பதால் லெப்ஃட், ரைட் & U turn எல்லாம் போட்டு காமிக்கறேள்!..:))

14 July 2011 at 11:42
Sivaguru  

Dear Madhangi,
To me, i stii have the image of Mali's daughter in 98.I have no words to express my admiration of your knowledge and maturity.Goodwork. Keep it up.Your commentary on the book is to be viewed inthe perspective of how you have enjoyed reading the book.your frank expression of the feelings of girls of these days is what i appreciate.Let your literary journey continue.All the best.
Sivaguru

14 July 2011 at 20:16

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் துணிச்சலாக உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கலாமோ?

சீதையின் அக்னிப்ர்வேசத்தை ஆண் பார்வையிலேயே பார்க்கிறோம் (பெண்கள் உள்பட). சீதை தீக்குளித்ததால் ராமனின் சந்தேகம் அப்படியே தான் இருக்கிறது என்பதை மறந்து விடுகிறோம் வெகு சுலபமாக. அத்யாத்ம ராமாயண நூலில் (எனக்கு மிகவும் பிடித்த ராமாயண version) சீதையே magic personality என்பது போல் வருகிறது. இன்னும் பல ராமாயண விளக்கங்களில் ராமன் மனிதனாகப் பிறந்ததால் மனிதனாக நடந்தான் என்று புருடா விளக்கங்கள் கிடைக்கின்றன. 'மனிதனாகப் பிறந்தவன் மனிதருக்கு நல்ல உதாரணமாக நடந்து கொண்டிருக்கலாமே - பெண்டாட்டியை சந்தேகப்படும் கேவலமானவனாக நடக்க வேண்டுமா?' என்று எண்ண, ராமனின் கடவுள் ஸ்தானம் இடம் கொடுக்கவில்லை. (சாமி கண்ணைக் குத்திடும்னு சின்ன வயசுலயே சொல்லி வச்சாச்சே?) தேவைப்படும் பொழுது ராமன் கடவுள், சமாதானம் சொல்ல வேண்டுமானால் மானிடப் பிறவி - இப்படியே போகிறது ராமாயணம். ராமாயண கதாபாத்திரங்களிலேயே குழப்படி பாத்திரம் ராமனுடையது தான் என்று நினைக்கிறேன்.

இவையெல்லாம் கதை, அல்லது நிகழ்வுகளை ஒட்டிய புனைவு, என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது வால்மீகி, வியாசரின் கற்பனை மற்றும் சிந்தனைத் திறன் அசாதாரண பிரமிக்கும் பத்துப் படி உயரத்தில் உலாவுகிறது. வால்மீகியும் வியாசரும் தான் கடவுள் :)

16 July 2011 at 20:33

சிந்தனைகளைக் கழற்றி விட்டுப் படிக்க வேண்டுமா? என்ன இது எல்.கே?

16 July 2011 at 20:43
Sriram, Doha  

மஹா பாரதம் ஒரு யானை. இந்த பதிவில் review செய்யப்பட்டுள்ள புத்தகத்தை நான் படித்ததில்லை. இருப்பினும் ஒன்றை புரிந்து கொள்ள முடிந்தது. இப்புத்தகத்தை எழுதியவர் வெறும் தும்பிக்கையை மட்டும் பார்த்து விட்டு யானையை வர்ணித்துள்ளார். உங்கள் பதிவு தீர்கமாகவும் முழுமையாகவும் அமைய முதலில் வியாச - விநாயக சம்பாஷணையை (மூல பாரதத்திலிருந்து) வாசித்து அவற்றின் உள்ளர்த்தத்தை புரிந்து கொண்டு மீண்டும் இந்த புத்தகத்தை review செய்யவும். இது என்னுடைய suggestion. இல்லையேல் நீங்கள் உங்களையும் குழப்பிக்கொண்டு அடுத்தவர்களையும் இந்த பதிவின் மூலமாக குழப்பியவர் ஆவீர்.

12 August 2011 at 01:29
Sriram, Doha  

விவரம் அறிந்தவர்கள் (ஞானி) விவரம் அறியாதவர்களுக்கு (அஞாநிகளிடத்து)மன கலக்கத்தை உண்டு பண்ணலாகாது.. எல்லா கர்மங்களிலும் தானும் ஈடுபட்டு அஞாநிகளையும் (விவரம் அறியாதவர்களையும்) ஈடுபடுத்த வேண்டும்,

- பகவத் கீதை. கர்ம யோகம். 26 வது சுலோகம்.

12 August 2011 at 01:49

வணக்கம் மாதங்கி,தங்களின் பதிவைப்பற்றி வலச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன் நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

16 November 2011 at 09:08

I am happy to see your Tamil Blog, which your father indicated to me; Your Brahminical language in Tamil is very appreciated; I hope that you are interested in Hindu art and culture and I want to show that our Hindu art and culture have been carved on the basis of the ancient indians' geo-centric astronomical concepts;Kindly make your own writings on the subject which can be seen through www.swamycosmology.wordpress.com and make your comments in ther blog as well as to my e-mail id; mannaiswami@gmail.com

6 May 2012 at 17:11

Post a Comment