நத்தை  

Posted by Matangi Mawley


என்னுடைய மூன்றாவது வயதில், பள்ளியின் ஏதோ ஒரு மூலையில் கும்பலோடு முட்டி மோதிக்கொண்டு வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். அதுதான் நான் முதல் முறையாக நத்தை கண்டது. 'கொளுக்-கொளுக்' என்ற உடலுக்கு, ஒரு ஓடு நிழல் தர அது கடந்து வந்த பாதையை எத்தனை ஆண்டுகளாகக் கடந்து கொண்டிருந்ததோ- என்று பல நாள் யோசித்ததுண்டு. யோசிப்பதுண்டு...

இலையின் அடிப்புறத்தில் ஒட்டிக்கொண்டு, அந்த இலை அசையும் தருணங்களில் அதை விட்டு விடாது கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும், அந்த நத்தை. "இந்தச் சிறியதொரு உருவிற்கு இத்தனை வலுவா"? என்று எண்ணி வியந்ததுண்டு. எத்தனை வருடங்கள் ஆயினவோ, அந்த இலையின் மீதிருந்து கீழே இறங்கி வர! கீழே- உடைந்து கிடந்த நத்தை ஓடுகளுக்கு மத்தியில், மீண்டும் இரண்டு நத்தைகள் அதன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தன.

எத்தனை-எத்தனையோ கல்பங்கள் கடந்து வந்த புவியில், அற்ப காலத்தில் தோன்றிய மனிதன் மட்டும் எவ்வாறு வேறுபடுகிறான்? எதற்காக அவன் அவனையே இவ்வாறு உயர்த்திக் கொள்கிறான்? சொற்ப காலத்தைத் தவழ்ந்து வந்து, தற்காலத்தைப் பிடித்துக்கொண்டவன், அவன். பல்வேறு பிரளயங்களையும், அதன் பின்னர் நிகழ்ந்த மாற்றங்களையும் தனக்குச் சாதகமாகச் சித்தரித்துக்கொண்டு, பூமியில் தன்னைத் தானே பிரதானித்துக் கொண்டு திகழ்கிறான். அவனே உருவாக்கிக் கொண்ட, பல்வேறு விதமான ஆக்கங்களாலும், அழித்தல்களாலும்- அசைந்துகொண்டும் கசிந்துகொண்டும் இருக்கும் பூமியின் மேல் தன்னையும் ஒட்டவைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.

கடலின் ஆழத்திற்கும், மலைச் சிகரங்களுக்கும், நிலப்பரப்பின் எல்லைகளுக்கும் உரிமை சம்பாதித்துக் கொண்ட மனிதன், விண்வெளிக்கும் சென்றான். ப்ரபஞ்சத்தை விலை பேசினான். அவன் தக்கப் பிடித்துக் கொண்டிருக்கும் பூமியின் வறுமை பொறுக்காமல்- அதை உதறிவிட்டுச் சென்று, வேறொரு இடம் தேடி, ப்ரபஞ்சத்தில் மிதந்துகொண்டிருக்கிறான். மனிதனின் ஆறாம் அறிவின் ஆற்றலுக்கு முன்னால், ப்ரபஞ்சம் எம்மாத்திரம்?!- என்று இருமாந்திருக்கிறான்.

விண்ணிர்க்கப்பாலும், மண்ணிர்க்கடியிலும் வளர்ந்து நிற்கிறது- ஒரு சக்தி. கண்ணுக்குத் தெரியாத அந்த சக்தியின் நாடி எவ்விடத்தில் இருக்கிறது- என்பதை ஆராய எண்ணியிருக்கிறது- மனிதனின் ஆறாம் அறிவு.

நத்தையின் வேகம்- அதனை உற்று நோக்கிக்கொண்டிருப்பவர்களை பொறுமை இழக்கச் செய்துவிடும். அதற்க்கு உதவி செய்யும் பொருட்டு- அதை ஒரு இலையின் மீது வைத்து, சற்று தொலைவில் விட்டு விடுவதற்குத் தூண்டிவிடும், அந்த நத்தையின் வேகம். ஆனால் அப்படிக் கொண்டு விடப்பட்ட நத்தை, உண்மையில் எங்கே செல்ல எத்தனித்திருந்தது? - என்பதை யார் அறிந்திருக்கக் கூடும்? அந்த நத்தையின் விருப்பம் இல்லாமல் அதைக் கொண்டு சேர்பித்த இடம்- அந்த நத்தைக்கு உவந்ததா? அதனால் அந்த இடத்திற்குத் தகுந்தாற்போல் இயங்க இயலுமா? அதற்க்கு அந்த இடம் பழக்கப் பட்டு விடுமா? - என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.

விண்ணிற்கும், மண்ணிற்கும், அதற்கப்பாலும்- உயர்ந்து நின்றிருக்கும் அந்த சக்தியும்- கிட்டத் தட்ட அப்படித்தான் எண்ணியிருக்க வேண்டும். எனவேதான்- நாடித் துடிப்பின் சப்தம் மட்டும் கேட்டிருக்கும் மனிதனால், அந்த நாடியின் நாதம் குடிகொண்டிருக்கும் இடத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. அப்படி அந்த இடத்தைக் காட்டிக் கொடுத்து விட்டால், புறியாத கேள்விகளுக்கு பதில் கிடைத்தது போல- மனிதன் திணறிப் போகக் கூடும். சரியான கேள்விகளையே கேட்டிராத மனிதனுக்கு- விடையைக் காண்பித்து, பூமிக்கு ஏற்பட்ட நிலையை தானும் அடைய வேண்டாம், என்றுதான் நினைத்துக் கொண்டதோ, அந்த சக்தி.

கேள்விகளைத் தேடிக்கொண்டிருக்கும் மனிதனுக்குக் கிட்டியதேன்னவோ- ப்ரபஞ்சத்தின் ஒரு துளி கண்டத்தில் அவன் அடைந்த ப்ரமிப்பு ஒன்றே தான்! அந்த ப்ரமிப்பின் தாக்கத்தினால்- அங்கேயே மிதந்துகொண்டிருக்கிறான்.

நத்தை ஓடுகளுக்கு மத்தியில், மீண்டும் இரண்டு நத்தைகள்- அதன் பயணத்தைத் தொடர்ந்தன...

This entry was posted on 19 May, 2011 at Thursday, May 19, 2011 . You can follow any responses to this entry through the comments feed .

22 comments

எல்லாவற்றையும் அறிந்துகொள்ளவும் தனக்கு உட்பட்டதாக ஆக்கிக்கொள்ளவும் ஆர்வம் உள்ள மனிதனின் இயலாமையை அழகாக சித்தரித்து உள்ளீர்கள்

19 May 2011 at 22:15

கிளாஸ் .... என்னதான் முயன்றாலும் விதிக்கப்பட்டதுதானே நடக்கும்

19 May 2011 at 22:50

Hello 'Nathai' I am sorry Matangi! Glad to stop by here. visting from KParthasarathi's site.

Loved the post though some of the words are beyond my understanding.

No, please don't get me wrong, I know Tamil. It's just that I haven't heard of nice Tamil in a very very long time...

Will be back to read more.

~ NRIGirl

19 May 2011 at 23:21

அற்புதமான மொழி நடையில் வாழ்வியலைச் சொல்லியிருக்கிறீர்கள்.

20 May 2011 at 02:10

இலையின் அடியில் ஒட்டிக்கொண்டு ஊஞ்சல் ஆடும் நத்தையைப்போன்றவன் தான் இந்தப்பிரபஞ்சத்தில் எங்கோ ஒர் ஓரத்தில் அண்டிக்கொண்டிருக்கும் மனிதனும். அருமை.

20 May 2011 at 02:55

சரியான கேள்விகளையே கேட்டிராத மனிதனுக்கு- விடையைக் காண்பித்து, பூமிக்கு ஏற்பட்ட நிலையை தானும் அடைய வேண்டாம், என்றுதான் நினைத்துக் கொண்டதோ, அந்த சக்தி.

...Simply Superb!!!!!!! நிறைய சிந்திக்க வைக்கும் பதிவு. அசத்திட்டீங்க!

20 May 2011 at 05:52

அற்புதமான சிந்தனை

20 May 2011 at 06:50

சிலிர்த்தேன் மாதங்கி.

இவான் துர்கேனிவ்வின்,"Fathers and sons" நாவலின் பஸாரவ் ஒரு வைக்கோல் போரின் மேல் படுத்தபடி இப்படித்தான் மனிதனின் அற்ப வாழ்க்கையைப் பேசுவான்.

இந்தப் ப்ரபஞ்சத்தின் பல ஆயிரம் கோடிக்கணக்கான ஜீவராசிகளில் நான் கண்ணுக்குத் தெரியாத கடுகில் ஒரு சிறு புள்ளி. எனக்குள் எத்தனை எத்தனை விதமான குணாதிசயங்கள்?என்ற ஆத்ம விசாரத்தில் ஆழ்ந்திருப்பான். அந்த பஸாரவ்வை நான் கண்டேன் உங்கள் எழுத்தில்.

எல்லாவற்றையும் ஆளவேண்டும்- எல்லாப் புதிர்களுக்கும் விடையறிய வேண்டும்-தனக்குத் தெரியாதது இருக்கக்கூடாது என்கிற அகங்காரம் வாழ்க்கையை ரசிக்கவேண்டிய காலத்தின் கண்களை மூடிவிடுகிறது.

நத்தை யாரையும் எதிர்பார்க்காமல் தன் பாதையில் யுகங்களாய் ஊர்ந்தபடி இருக்கிறது.தடை வரும் போது தன்னையே ஓட்டுக்குள் சுருக்கிக் கொள்கிறது. அதன் மென்மைக்கு ஒவ்வாத மனிதனிடம் சிக்க நேர்கையில் அமைதியாய் உயிர்துறக்கிறது.

மேலும் மேலும் பல கோணங்களில் யோசிக்கவைக்கிற அபாரமான பதிவு.

உங்களின் சிந்தனையின் மேன்மையைக் கைகூப்பித் தலைவணங்குகிறேன் மாதங்கி.

20 May 2011 at 10:30

நத்தையின் வேகம். மனிதனின் வேகம். இரண்டுமே புரிந்து கொள்ள முடியாதவை
உளவியல் சார்ந்த பதிவு.

\\கேள்விகளைத் தேடிக்கொண்டிருக்கும் மனிதனுக்குக் கிட்டியதேன்னவோ- ப்ரபஞ்சத்தின் ஒரு துளி கண்டத்தில் அவன் அடைந்த ப்ரமிப்பு ஒன்றே தான்! //

மிகவும் சரி.
.

20 May 2011 at 12:21

//ஆனால் அப்படிக் கொண்டு விடப்பட்ட நத்தை, உண்மையில் எங்கே செல்ல எத்தனித்திருந்தது? - என்பதை யார் அறிந்திருக்கக் கூடும்// ஆம், உதவுவதே தவறாகக் கூடுமில்லையா?

சிந்திக்க வைக்கும் பதிவு..

20 May 2011 at 22:32

Wow... I admire the maturity in your writing... not everyone is got a way with words which you're blessed with and we're blessed to read it... keep up the good work..:)

20 May 2011 at 23:35

ஊர்ந்துசெல்லும் நத்தை விட்டுச் செல்லும் எச்சிற்தடம் அது திரும்பி வர இட்டுசெல்லும் அடையாளம் என்பார்கள்..
மனதனுக்குத்தான் இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லை... மயக்கத்தால் மட்டுமே நகரும் வாழ்க்கை.

21 May 2011 at 00:02

excellent one as usual.

21 May 2011 at 15:07

ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!! பெருமூச்சு மட்டும் தான் என்னால விடமுடியர்து மாதங்கி!..:)

21 May 2011 at 16:12

ப்ரமிப்பின் தாக்கத்தினால்- அங்கேயே மிதந்துகொண்டிருக்கிறான்.

21 May 2011 at 22:35

//கேள்விகளைத் தேடிக் கொண்டி ருக்கும் மனிதனுக்குக் கிட்டியதேன் னவோ- ப்ரபஞ்சத்தின் ஒரு துளி கண்டத்தில் அவன் அடைந்த ப்ரமிப்பு ஒன்றே தான்! அந்த ப்ரமிப்பின் தாக்கத்தினால்- அங்கேயே மிதந்து கொண்டிருக்கிறான். //
முதல் தரம்!மேம்போக்காகப் படித்துவிட்டு ஓட முடியாத ஒரு பதிவு!நன்று,மாதங்கி!

22 May 2011 at 11:57

மாதங்கி, உங்கள் பதிவுகளை நான் தவறாமல் படிப்பதுண்டு. அடிக்கடி வரும் சந்தேகம் உங்கள் தமிழ் நடையில் காணப்படும் மாற்றம், சில சமயங்களில் தமிழ் சுமாராக எழுதப் படிக்கத் தெரிந்தவர் போல் எழுதுகிறீர்கள். சில சமயம் அழகு தமிழில் பதிவிடுகிறீர்கள் .நல்ல தமிழில் எழுதும் விஷயங்கள் என்னை மிகவும் சிந்திக்க வைக்கிறது.எழுதுவது நீங்கள்தானா என்ற ஐயம் எழுகிறது.
உங்கள் எண்ணத்தெளிவும் கருத்தாழமும் எனக்கு வியப்பூட்டுகிறது. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

22 May 2011 at 12:35

ஏதோ பெரிய விஷயம் எழுதியிருக்கீங்கன்னு தெரியுது.. நத்தை வேகத்துல தான் புரிஞ்சுக்க முடியுது... ;-)))

23 May 2011 at 22:27

ஒத்தை
நத்தையின் நகரலில்
கத்தை கத்தையாய்
கருத்துக்களை
தந்தவிதம்
வியாபம்
வாழ்த்துக்கள் தோழி

23 May 2011 at 22:38

இந்த முறை இரு அறிவுஜீவிக‌ளும் ஆறாம் அறிவு ப‌ற்றியே ப‌திவிட்டிருக்கிறீர்க‌ள்.
(ப‌ர‌ஸ்ப‌ர‌ பின்னோட்ட‌ங்க‌ளும் கூட‌). நாம் ந‌ம‌து பார்வையில், "கொளுக் மொளுக்"
நத்தைக‌ளையும், அட‌ர்வ‌ன‌த்தில் நீர‌ருந்தும் அணிலையும், யானையையும் பார்த்து ப‌திவினில் ப‌கிர்கிறோம். அவைக‌ளின் பார்வையில், நாம் யாராய், எதுவாம், என்ன‌வாய் தோன்றுவோம்?
ஒரு பூத‌மாய், விஷமிருக‌மாய், தேவ‌தையாய்? அவர‌வ‌ர் / அத‌ன‌த‌ன் வாழ்வில் அதுவே க‌தாநாய‌க/நாய‌கி, ஆனால் ம‌னித‌ன் தான் ம‌ட்டுமே ஆறாவ‌து அறிவுட‌ன் ம‌ற்றெல்லா உயிர்க‌ளைவிட‌வும் உய‌ர்ந்த‌தாய் எண்ணி எழுதி சுய‌த‌ம்ப‌ட்ட‌த்தில் தன் இன‌மே உய‌ர்ந்த‌தாக கூவித் திரிகிறோம். ந‌ம்மை பார்த்து ம‌ற்ற‌ உயிரின‌ங்க‌ள், கிறுக்க‌ர்க‌ள் என்றே, விள‌க்கின் ஒளியில் சாகும் விட்டில் போல, செல்வ‌ம் சேர்ப்ப‌த‌ற்காய் சாகும் அறிவிலிக‌ள் என்றோ நினைத்து கேலி பேச‌லாம் தானே? எறும்பின் போர்திறமும், ஒழுங்குமுறைக‌ளும் தேர்ந்த‌ சிறப்பு ‌ப‌யிற்சி பெற்ற‌ ராணுவ‌ம்/ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் ந‌ட‌வ‌டிக்கை போல‌ இருக்கும். ஒவ்வொரு உயிர‌னங்க‌ளூம் அத‌ன‌த‌ன் பார்வையில் ம‌னித‌னை விட‌ அதிக‌ அறிவு கொண்ட‌தாகவே இருக்க‌லாம்.
உன‌து விழியில் என‌து பார்வையென‌ பாட‌த்தெரிந்த‌ நாம் ஏன் அவைக‌ளின் விழியில் ந‌மது பார்வையால் ந‌ம்மையே பார்க்க‌க் கூடாது?

25 May 2011 at 17:07

நத்தையைக் காட்டி, தத்துவம் சொன்ன அழகு அற்புதம், மாதங்கி!

//நத்தையின் வேகம்- அதனை உற்று நோக்கிக்கொண்டிருப்பவர்களை பொறுமை இழக்கச் செய்துவிடும். அதற்க்கு உதவி செய்யும் பொருட்டு- அதை ஒரு இலையின் மீது வைத்து, சற்று தொலைவில் விட்டு விடுவதற்குத் தூண்டிவிடும், அந்த நத்தையின் வேகம்.//

மனிதனின் மேல் வைக்கும் அபிமானம் தான் மனிதாபிமானம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம்!
இதுவும் உச்சப்பட்ச ஒரு மனிதாபிமான செயல் தான்!

//ஆனால் அப்படிக் கொண்டு விடப்பட்ட நத்தை, உண்மையில் எங்கே செல்ல எத்தனித்திருந்தது? - என்பதை யார் அறிந்திருக்கக் கூடும்? அந்த நத்தையின் விருப்பம் இல்லாமல் அதைக் கொண்டு சேர்பித்த இடம்- அந்த நத்தைக்கு உவந்ததா? அதனால் அந்த இடத்திற்குத் தகுந்தாற்போல் இயங்க இயலுமா? அதற்க்கு அந்த இடம் பழக்கப் பட்டு விடுமா? - என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.//

பலசமயங்களில் உணர்வின் அடிப்படையில் மனிதன் கொள்ளும்
அபிமானங்கள் தோற்றுவிடுவது இப்படித்தான்! அறிவு அவனுக்கு
'அசடே!' என்று ஆயிரமாயிரம் இதோபதேசங்கள் செய்கிறது.
உணர்வு பேசாமல் அறிவின் ஆக்கிரமிப்பில் அடங்கிப்போகிறது.

26 May 2011 at 19:34

Just as you brood over the the snail's pace and the purpose in life, I brooded over shortly whether the term மனிதன் used in the post implied the male of the species or generally humanity. :-)

31 May 2011 at 13:54

Post a Comment