பரமபதம்  

Posted by Matangi Mawley


"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி" கேட்டுத் துவங்கிய பல காலை வேலைகளின் விளைவே "மஞ்சகாப்பு" கட்டுரை. அதன் பிற்பாடு ஒரு சில சமயங்களில் நான் "திரும்பிப் பார்த்திருக்கும்" பொழுதுகளில் ஒரு சில விஷயங்களைப் பற்றிய என் கருத்துக்களில் பல்வேறான எண்ணங்களின் தாக்கம். "இருப்பது", "இல்லாதது" என்று பல வேதாந்தங்களும், சித்தாந்தங்களும் அவ்வபோது மனதினில் இடம் பிடித்துக் கொண்டும், விடை பெற்றுக்கொண்டும் இருக்கும் இந்த வேளையில் தான், நான் இவர்கள் இரு தரப்பையுமே சாரவில்லை என்ற ஞானம் எனக்கு உதித்தது. ஏனெனில்- நான் "இருப்பது" என்பவர்களின் பக்தியையும் ரசிக்கத் தெரிந்திருக்கிறேன், "இல்லாதது" என்பவர்களின் வாதங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இவை அனைத்திற்கும் இடையில், நம் "கலாசாரம்" எனப்படுவதை நாளைய உலகத்திற்கு எடுத்துச் செல்வது என்ற பொறுப்பு- யாரும் நமக்கு அளிக்காவிட்டாலும், நம்முடையது- என்பதும் உண்மை.

நம் கலாச்சாரத்தைப் பொறுத்த வரையில் "பக்தி" எனப்படும் அந்த உணர்விற்கு நம் கலாசார முன்னேற்றத்தில் ஒரு பெரும் பங்கு உண்டு என்பதை மறுக்க இயலாது. ஆயிரம் வருடங்களாக உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவிலாக இருக்கட்டும், "நம்ம தாயார் என்ன அழகா இருக்கா, பாரேன்"- என்று சிலைகளின் அழகில் உணர்ச்சிகள் தேடும் சாதாரண மக்களின் "பக்தியாக" இருக்கட்டும். "தப்பு பண்ணினா சாமி கண்ணா குத்தும்"- என்ற உணர்வு, குழந்தை முதல் ஒரு மனிதனை ஒழுக்கத்தின் பாதையில் நடக்க உதவியிருக்கிறது.

நம் கலாசாரத்திலும், பக்தியிலும் இன்றைக்கு எத்தனையோ மாற்றங்கள். "வைகுண்ட ஏகாதசி" அன்று "சுவர்க்க வாசல்" திறக்கப்படும், கோவில்களில். அதில் நுழைந்தால்- "சுவர்க்கம் நிச்சயம்" என்பது ஐதீகம். அது ஒரு உணர்வு. 80 - 90 வயது நிரம்பிய ஒருவர், தன கடமைகளை எல்லாம் முடித்தவர், முழுமையாக உணர்ந்து அனுபவிக்கும் ஓர் "மன நிறைவு" அது. ஆனால் இன்றைக்கு, வளர்ந்த சூழ்நிலையும்- சுற்றி நடக்கும் நினைவுகளினாலும் பாதிக்கப்பட்ட சிந்திக்கும் திறனானது- 50 ரூபாய் கொடுத்து, வரிசையில் நின்று, சுவர்க்கத்தில் ஒரு 'seat reserve ' செய்கிறோம், என்றுதான் நினைக்க முடிக்கிறதே தவிர- "மன நிறைவு" என்ற "பக்தி" எனப்படுவதற்கே உரிய உணர்வு இங்கு இல்லை.

"ராதா-கிருஷ்ணா" என்ற எண்ணம், அதனுடைய காவியத் தன்மயினால் அமரத்துவம் பெற்றது என்பது என் கருத்து. சில நேரங்களில், காவியங்களினால்தான் "பக்தி" உருவாக்க
ப் படுகிறது. மொகல் மன்னர்களின் படைகளிலேர்ந்து ரங்கனையும்-தாயாரையும் பாதுகாக்க, தாயாரை வில்வ மரத்தினடியில் புதைத்து; ரங்கனை ஒரு குழு ஒன்று, வேறு தேசம் கொண்டு சென்றது. பல வருடங்கள் ஆகியும், அக்குழு திரும்பாததால் வேறொரு "ரங்கன்" செய்து வழிபட துவங்கிவிட்டார்கள். ஆனால் தாயாரை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. பல வருடங்கள் கழித்து, குழுவில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்து, மொகல் படைகளிடமிருந்து ரங்கனைக் காத்து எடுத்து வந்தார். ஆனால் புது-ரங்கனால் பிழைத்திருக்கும் தற்போதைய குழு- இந்த ரங்கனை ஒப்புக்கொள்ளவில்லை. 90 வயது நிரம்பிய, கண் பார்வை மங்கிப்போன ஒரு வண்ணான்- பழைய ரங்கனின் ஆடை நறுமணம் கொண்டு, அவரே "உண்மையான ரங்கன்" என்று கூறிய பிற்பாடே அந்த ரங்கனை ஒப்புக்கொண்டார்கள். தாயார், அவளது உண்மையான கணவன் வந்தவுடன், கோவில் தர்மகர்த்தாவின் கனவில் தோன்றி "புதைத்த இடத்திலேயே என்னைத் தேடு, நான் கிடைப்பேன்", என்றாளாம். இப்படிப்பட்ட சில கதைகளும் "பக்தி"/நமது கலாச்சாரத்திற்கு அடையாளமாக விளங்குகின்றன.

இன்றைய காலகட்டத்தில்- நமது பல கோவில்களை சீர் செய்திருக்கிறார்கள். சமீபத்தில் நான் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றிருந்தபோது- பல வவ்வால்
தோட்டங்கள் காணாமல் போயிருந்தன. நல்லதுதான். ஆனால் எனக்கு என்னவோ அங்கு வவ்வால்களைப் பார்த்தல் தான் அந்தக் கோவிலின் பழமையையும், பெருமையையும் முழுமையாக உணர முடிகிறது. கோவில்கள், எந்த காலகட்டத்திலுமே பல ஜீவராசிகளுக்கு இருப்பிடமாக உள்ளது. "Renovation " எனப்படுவது அந்த கீவராசிகளையும் பாதிக்காது இருத்தல் அவசியம். அதே போல பரீட்சை roll number ஐ கரியில் கோவில் சுவறுகளில் கிறுக்கும் "கலாசாரத்தை" நம் காலத்தோடு நிறுத்திக் கொள்ளுதலும் அவசியம்.

கலாசாரத்தை
வருங்காலத்திற்கு கொண்டு செல்வது என்னும் பொறுப்பானது- வெறும் கோவில்களையும், அங்குள்ள சிலைகளையும் குழந்தைகளுக்கு
காட்டுதலாகிவிடாது. 1000 வருடங்களாக ஒரு கோவில் இருக்கிறது என்றால்- அது கற்களும் மணலும் சேர்ந்த கலவை மட்டுமல்ல. அந்த கற்களையும் மணலையும் சேர்த்து கட்டி நிற்க வைப்பது ஒரு உணர்வு. அந்த உணர்வை புரிந்து கொண்டாலே அந்தக் கோவிலின் இருப்பதை புரிந்துகொள்ள இயலும். இப்படிப்பட்ட சில விஷயங்களை நினைத்துப் பார்க்கையில்- நம் அறிவையும்- சித்தாந்தங்களையும்- நாம் நம்பாத நம்பிக்கைகளையும் பின்னே வைத்து விட்டு விட நேரும் இந்த கலாசாரத்தை முன்னே எடுத்துச் சல்ல வேண்டிய பொறுப்பானது, மிக மிக கடினம் தான்- என்று நினைக்க வைக்கிறது.

This entry was posted on 22 December, 2010 at Wednesday, December 22, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

14 comments

அற்புதமான பதிவு...தமிழிலும் அழகான மாற்றம் ..மீண்டும் வருகிறேன்...

23 December 2010 at 07:21

நல்ல முதிர்ச்சியான பதிவு மாதங்கி.

இளம் வயதிலேயே ஒரு வீட்டின் சூழ்நிலைதான் ஒரு குழந்தையின் திசையையும் சிந்தனா வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது என் வாதம்.

அதை அழகாய் நிறைவாய் உணர்த்துகிறது பக்தி குறித்தும் நம் கலாச்சாரம் குறித்தும் உங்கள் தெளிவான பார்வைகள்.

இன்றைய ஆட்சியாளர்களிடமும் முற்போக்கு என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்களிடமும் இல்லாத அற்புதமான தடம் இது.

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களால் பெருமை கொள்ளலாம்.

உங்கள் பெற்றோர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்.

23 December 2010 at 07:33

http://www.youtube.com/watch?v=v-TkkTjQdc8

அந்தத் திருவரங்கத்தான்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
உங்கள் வலைப்பதிவுக்கு வரும் நண்பர் அனைவருக்கும்
நல்லவை எல்லாம் அருளிச்செய்ய‌
அவன் பாதகமலம் சேர்கின்றேன்.

புது வருட வாழ்த்துக்கள்.
இன் அட்வான்ஸ்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
http://pureaanmeekam.blogspot.com

23 December 2010 at 08:07

என் பதிவின் பின்னூட்டம் பார்த்து உங்கள் பதிவைத் தேடிப் படித்தேன்.உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தேன்.இந்த இளவயதிலேயே objective ஆக சிந்திக்கிறீர்கள்.நம் இளைஞர்(ஞி)கள் சரியான பாதையில்தான் பயணிக்கிறார்கள் என்பதற்கு நீங்கள் ஒரு அடையாளம், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபொல.வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்

23 December 2010 at 12:18

//நம் "கலாசாரம்" எனப்படுவதை நாளைய உலகத்திற்கு எடுத்துச் செல்வது என்ற பொறுப்பு- யாரும் நமக்கு அளிக்காவிட்டாலும், நம்முடையது- என்பதும் உண்மை.//

நுண்ணியதாய் மனத்திற்குள் பொத்தி வைத்த உணர்வுகள் அற்புதமாய் பூத்திருக்கின்றன. தீர்க்கமான வார்த்தைகளும் அவற்றை உள்ளடக்கிய தேர்ந்த வரிகளும்
மனசுக்கு இதமாய் இருக்கின்றன.
வாழ்த்துக்கள்..

23 December 2010 at 14:24

நமது பெருமைக்குறிய கலாச்சார சுவடுகளை போற்றி , காப்பாற்றி , எதிர் வரும் தலைமுறைகளுக்கும் எடுத்துச செல்லவேண்டிய நமது பொறுப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு , எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது ..அரையர் சேவைக் காட்ஷியும், கருட மண்டபத்துச சிலையும் , வில்வமரமும் ( தாகூர் சொன்னது போல )அனந்த முஹூர்த்தம் ,"eternal moments "
இந்த பதிவிற்காக உனக்கு ப்ரத்யேக வாழ்த்துக்கள் ..
.மாலி

23 December 2010 at 16:56

இப்போதுதான் கைத்தல சேவை சேவித்து விட்டு வருகிறேன்.. இங்கே பார்த்தால் உங்கள் ஸ்ரீரங்கம் பதிவு.
நம்பெருமாளைக் காட்டிக் கொடுத்த ‘ஈரங்கொல்லி’க்கு நம் நன்றி எப்போதும். (வண்ணான்=ஈரங்கொல்லி)
“அது கற்களும் மணலும் சேர்ந்த கலவை மட்டுமல்ல. அந்த கற்களையும் மணலையும் சேர்த்து கட்டி நிற்க வைப்பது ஒரு உணர்வு. அந்த உணர்வை புரிந்து கொண்டாலே அந்தக் கோவிலின் இருப்பதை புரிந்துகொள்ள இயலும். ”
அருமையான வார்த்தை.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதன் விடை.. நம்மைத்தான் நமக்கு அடையாளம் காட்டுகிறது!

23 December 2010 at 18:58

excellent post.

24 December 2010 at 15:39

\\\\\நம் "கலாசாரம்" எனப்படுவதை நாளைய உலகத்திற்கு எடுத்துச் செல்வது என்ற பொறுப்பு- யாரும் நமக்கு அளிக்காவிட்டாலும், நம்முடையது- என்பதும் உண்மை.//////

....தலை வணங்குகிறேன்

25 December 2010 at 12:46

//அந்த கற்களையும் மணலையும் சேர்த்து கட்டி நிற்க வைப்பது ஒரு உணர்வு. அந்த உணர்வை புரிந்து கொண்டாலே அந்தக் கோவிலின் இருப்பதை புரிந்துகொள்ள இயலும்//

அழகான ஒரு ஆன்மிக தாக்கம் உள்ள ஒரு சமூக சிந்தனைவாதிக்கு நல்ல மொழி ஆற்றலும் வாய்க்கும் பட்சத்தில் அவனது எழுத்துக்கள் எவ்வாறு வெளிப்படும் என்பதை பதிவு முழுவதும் உணரமுடிகிறது. அழகான கருத்துக் கோர்வை! வாழ்த்துக்கள் மாதங்கி!

25 December 2010 at 16:28

உணர்வு பூர்வ‌மான க‌ட்டுரை.
ஒவ்வொரு பருவ‌த்தினருக்கும்,
ஒவ்வொருவித‌மாய் தோன்றும்
தெய்வ‌த்தை, தெய்வீக‌த்தை
எளிமையாய் எழுதிவிட்டீர்க‌ள்.

29 December 2010 at 14:58

@ all...

thanks!

2 January 2011 at 22:47

அழகான படங்கள். அக்காலத்தில் கோவில்களில் வௌவால் தோட்டங்கள் இருந்தனவா என்பது கேள்விக்குறி. ஆனாலும் கோவில்கள் பிற ஜீவன்கள்களுக்கு ஒரு இருப்பிடமாக இருப்பது என்னவோ உண்மை. அதைக்காண்பதில் ஒரு அமைதி இருக்கிறது.

3 January 2011 at 19:43

@ ramm...

thanks! very true...

6 January 2011 at 21:23

Post a Comment